திருச்சி, மார்ச் 25: திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் போட்டியிடுகிறார். இவர் கடந்த ஒரு வாரமாக திறந்த ஜீப்பிலும், நடந்து சென்றும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று பெரியகடைவீதி, ஜாபர்ஷா தெரு உள்ளிட்ட பகுதிகளில் திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அரசின் நலத்திட்டங்களை எடுத்து கூறி வீடு வீடாகவும், கடை, கடையாகவும் ஏறி, இறங்கி வாக்குகள் சேகரித்தார். வேட்பாளர் சென்ற பகுதிகளில் அவருக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.வேட்பாளர் வெல்லமண்டி வாக்கு சேகரிப்பின்போது எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணை செயலாளர் சீனிவாசன், ஆவின் சேர்மன் கார்த்திக் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்று வாக்குகள் சேகரித்தனர்.